Friday, August 31, 2007

எதிர்பாராத தூக்கு - விடை

இது கொஞ்சம் பிரபலமான புதிர். அதனால் சரியான விடை வந்து விடும் என்று எதிர்பார்த்தேன். மாசிலாவும், வவ்வாலும் வித விதமான பதில்கள் சொன்னாலும், எதுவும் சரியில்லை. அதனால், நானே விடையை சொல்லி விடுகிறேன்.

இந்தப் புதிரில், குற்றவாளி ஏன் தீர்ப்பை கேட்டதும் சந்தோஷப்பட்டான் என்பது புரிந்துவிட்டால், அடுத்த கேள்விக்கும் விடையளித்து விடலாம். தீர்ப்பைக் கேட்டதும் அவன் பின்வருமாறுதான் சிந்தித்திருப்பான். அதாவது, "முதல் ஆறு நாளும், என்னைத் தூக்கில் போடவில்லையென்றால், கண்டிப்பாக ஏழாவது நாளில் தூக்கில் ஏற்றப்படுவோம் என்று நான் எதிர்பார்ப்பேன். அதனால் தீர்ப்பின் படி என்னை ஏழாவது நாளில் தூக்கில் போடவே முடியாது. இப்பொழுது ஆறாவது நாள்! முந்தைய ஐந்து நாட்களிலும் என்னை தூக்கில் போடவில்லை. எழாவது நாளும் தூக்கில் போட முடியாது என்பது ஏற்கனவே எனக்குத் தெரியும். அதனால், ஆறாவது நாளில் என்னை தூக்கில் போடுவார்கள் என்று கண்டிப்பாக எதிர்பார்ப்பேன். அதனால் ஆறாவது நாளும் என்னை தூக்கில் ஏற்ற முடியாது. இதேபோலவேதான், ஐந்தாவது, நான்காவது, மூன்றாவது, இரண்டாவது நாட்களும் கண்டிப்பாக தூக்கில் போட முடியாது. இப்படி இரண்டிலிருந்து, ஏழாவது நாள் வரை எந்த நாளிலுமே என்னை தூகில் போட முடியாததால், கண்டிப்பாக முதல் நாளில்தான் தூக்கில் போடுவார்கள் என்று எதிர்பார்ப்பேன். இப்பொழுது, அந்த நாளிலும் என்னைத் தூக்கில் போட முடியாது."

இப்படி தனக்கான தீர்ப்பை எந்த நாளிலும் நிறைவேற்ற முடியாது என்று அவன் சிந்தித்ததால், அவன் சந்தோஷப்பட்டான்.

ஆக, இப்பொழுது அவன் வாரத்தில் எந்த நாளிலும் தன்னை தூக்கில் போட முடியாது என்று எதிர்பார்க்கிறான். அதனால், அடுத்த வாரத்தின் எந்த நாளில் தூக்கு மேடையில் ஏற்றப்பட்டாலும், அவன் மிகவும் ஆச்சர்யப்பட்டிருப்பான்.

பி.கு: இந்த விடையோடு கொஞ்சம் முரண்படுகிறவர்களும் உண்டு. ஏனென்றால் இதன் அடிப்படையே முரண்பாட்டு கொள்கையில் அமைந்ததுதான். இந்த சிந்தனைப் போக்கை மேலும் மேலும் விரிவுபடுத்தி கொண்டே போகலாம். அப்பொழுது உங்களுக்கு கிடைப்பது முடிவில்லாத முரண்பாடுகள்தானன்றி, எந்த முடிவும் கிடைக்காது.

3 comments:

Show/Hide Comments

Post a Comment