Thursday, March 29, 2007


சாயங்காலம் மணி சரியாக ஆறு. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு (பெயர் தெரியாத) ரயில், சேலத்தை நோக்கி கிளம்புகிறது. அதே ஆறு மணிக்கு சேலத்திலிருந்து இன்னொரு (பெயர் தெரியாத) ரயில் சென்னையை நோக்கி கிளம்புகிறது. இரண்டு ரயில்களும் 100 கி.மீ. வேகத்தில் பயனிக்கின்றன.

சரியாக இரண்டு ரயில் இஞ்ஞின்களின் தலைகளுக்கும் இடையே 250 கி.மீ. தூரம் இருக்கும்பொழுது, முதல் ரயில் இஞ்ஞினின் தலையிலிருந்து ஒரு ஈ, மணிக்கு 120 கி.மீ வேகத்தில், இரண்டாவது ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. ரயில் தண்டவாளத்தின் பாதையிலேயே பறந்து செல்கிறது. இரண்டாவது ரயிலின் இஞ்ஞினைத் தொட்டவுடன், திரும்பி முதல் ரயிலை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது. முதல் ரயிலின் இஞ்ஜினைத் தொட்டவுடன் மறுபடி திரும்பி இரண்டாவது ரயிலை நோக்கி பறக்கிறது. இப்படியே இரு ரயில்களும் மோதும்வரை மாறி மாறி பறந்து, கடைசியில் இரு ரயில்களுக்குமிடையில் சிக்கி இறந்து போனது.

ச்சு.. ச்சூ.. ச்சூ.. ச்சூ..

உச்சூ கொட்டுனது போதும். இப்ப கேள்விக்கு வாங்க!
அந்த ஈ முதல் தடவை, முதல் ரயிலிலிருந்து பறக்க ஆரம்பித்ததிலிருந்து, கடைசியில் இறந்து போகும் வரை மொத்தம் எத்தனை கி.மீ. பறந்தது?

பி.கு.:
இதுக்கு சரியா விடை சொன்னீங்கன்னா இன்னொரு கதை சொல்லுவேன்!!!

Wednesday, March 28, 2007

காட்சிப் பிழை








Tuesday, March 20, 2007

கிறுக்கு பிடிச்சாச்சு!!!

இந்த தடவை சிவகுமார் மாட்டி விட்டு விட்டார். முதலில் மறுத்து விடலாம் என்றுதான் யோசித்தேன். பிறகு, சரி பரவாயில்லை எழுதுவோம் என்று முடிவெடுத்ததால், எனது கிறுக்குத்தனங்களையெல்லாம் படிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நீங்கள் ஆளாகிப் போனீர்கள்!!!

முதலாவது மறதி - செல்ஃபோன் முதல், டிக்-ஷனரியளவு பெரிய புத்தகம்வரை கூட, இடது கையில் அதை வைத்து கொண்டே, வலது கையால் வீடு முழுக்கத் தேடுவேன். சமீபத்திய அவஸ்தை, அறையிலிருந்து கிளம்பும்பொழுது(இந்த ஞாயிற்றுக்கிழமைதான்!) சமையலறையில் குழாயை அடைக்காமலே சென்று விட்டதால், இரவு வீடு திரும்பியபொழுது வீடு தெப்பக்க் குளமாக மாறியிருக்க, இரவு உறக்கம் போனது. இதெல்லாம் சகஜம்தானேங்கறீங்களா? இது இந்த மாதத்தில் இரண்டாவது முறை. இதற்கென்ன சொல்கிறீர்கள்?!?!.

கொள்(ல்)கை உறுதி - சில விஷயங்களில் தோல்விக்கு இதுதான் காரணம் என்று வெளிப்படையாக தெரிந்தால்கூட, அதுதான் சரியான அல்லது நல்ல வழிமுறை என்று எனக்குள் தோன்றிவிட்டால், கொஞ்சம் கூட வழிமுறையை மாற்றிக் கொள்ளாமல், அதே வழியைதான் திரும்ப திரும்ப கையாள்வேன்.

சோம்பேறித்தனம் - கொஞ்ச நஞ்சமல்ல. இது நிறையவேயிருக்கிறது. சில சமயம், மதிய சாப்பாட்டுக்கு போவதற்கு சோம்பல்பட்டு, சாப்பிடாமலேயே கூட இருந்து விடுவேன். பதிவுகள் கூட இதே காரணத்தினால்தான், சிறு சிறு பதிவுகளாக போடுகிறேன்.

தனிமை - "Cast Away" படம் பார்த்தபொழுது, அடடா!! நாம் இந்த மாதிரி ஒரு தீவில் மாட்டி கொண்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருக்குமே, என்று நினைக்குமளவிற்கு தனிமை விரும்பி. பல சமயம் கொடுமையாயிருந்தால் கூட, அந்த இனிமையை ரசிக்க விரும்புகிறேன்!!!

Imitation(சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை!!) - கொஞ்சம் பெரிய மனிதர்கள் ஏதாவது செய்தால், நம்மால் அது முடியுமா முடியாதா என்பதை பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் அது போல் செய்து பார்ப்பது. சிறந்த உதாரணம் சுஜாதா கதை எழுதிறார் என்பதற்காக நானும் கதை எழுதுவது!!!

அப்புறம், எனக்கு யார் யாருடைய கிறுக்குத்தனங்களை பற்றியெல்லாம், தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசையென்றால்,

1. இலவச கொத்தனார்
2. இட்லிவடை
3. சிபி
4. PKP
5. பொன்ஸ்

இதில் யார் யாரெல்லாம் கண்டிப்பாக எழுதுவார்கள் என்று தெரியவில்லை. பார்க்கலாம்!!!!

Saturday, March 17, 2007

ஐஸ் ஐஸ் பேபி!!!

கோடை ஆரம்பிச்சாச்சு. வெயில் இப்பவே தாங்க முடியலை. சரி ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு ஒரு ஐஸ் கிரீம் பார்லருக்கு போனேன்.




அன்னைக்குன்னு பார்த்து அங்கே புதுசா ஒரு ஸ்கீம் அறிமுகப்படுத்தியிருந்தாங்க. அந்த பார்லரில் எப்பவுமே மெனுவில் ஒரு ஃபேமிலி கப் உண்டு. கொஞ்சம் பெரிய சிலிண்டிரிக்கல் கிளாஸில் ஐஸ் கிரீமை சமமட்டத்திற்கு நிரப்பித் தருவார்கள். விலை 90 ரூபாய்.




அன்னைக்கு ஃபேமிலி கப் ஜாரின் அதே விட்டம், உயரமுள்ள இரண்டு கோன் ஐஸ் கிரீம்கள், அதே 90 ரூபாய்க்கு விற்பதாக விளம்பரம் போட்டிருந்தார்கள். ஃபேமிலி கப்பை விட கோனுக்கு ஆர்டர்கள் அமோகமாக பறந்து கொண்டிருந்தன. ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்த நேரத்தில் கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன், இந்த புதிய ஸ்கீமால் கடைக்காரருக்கு எவ்வளவு நஷ்டமென்று!! எவ்வளவு நஷ்டமென்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?