Monday, September 25, 2006

கொள்ளை - விடை

இந்த புதிரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கொள்ளைக்காரர்கள் எல்லோருமே அறிவாளிகள், ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்கிலிருந்து கொஞ்சம் குறைந்தாலும் ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளமாட்டார்கள்.

இப்பொழுது சதீஷ் மட்டுமே இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது எல்லா பொற்காசுகளுமே அவனுக்குத்தான்.

சரி. இப்பொழுது சதீஷும், ராஜேஷும் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். ஒப்பந்தம் சொல்பவனுக்கு எதுவுமே கிடைக்காது. ஏனென்றால் ஒப்பந்தம் சொல்பவன் எவ்வளவு கொடுப்பதாக சொன்னாலும், கேட்பவன் அதை மறுத்து விட்டு அவனை கொன்று விடுவான். அதனால் இருவர் மட்டுமே இருக்கும்பொழுது ஒப்பந்தம் கேட்பவனுக்குத்தான் எல்லா காசுகளும் கிடைக்கும்.

இப்பொழுது இவர்களுடன் கலையும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது என்ன ஆகும்? ஒப்பந்தம் கூறுபவன் சொல்வது மறுக்கப்பட்டால், அவன் இறந்து விடுவான்; அப்புறம் இருவர் மட்டுமே இருப்பர்; அப்பொழுது ஒப்பந்தம் கூறப்போகிறவனுக்கு எதுவுமே கிடைக்க போவதில்லை. அப்படியிருக்கையில் அவன் மூன்றாமவன் கூறும் ஒப்பந்தத்துக்கு கண்டிப்பாக ஒத்து கொள்வான். அதனால் ஒப்பந்தம் கூறுபவன் 1000 பொற்காசுகளையும் எடுத்து கொண்டு, மற்ற இருவருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான்.

இப்பொழுது சுரேஷும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். மொத்தம் நான்குபேர். குறைந்தபட்சம் மூன்று பேர் ஒப்பந்தத்தை ஒப்புகொண்டால்தான் ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்படும். ஒப்பந்தம் கூறுபவன் மேலும் இருவரை தனது ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு செய்யவேண்டும். ஏற்கெனவே மூவர் மட்டுமே இருந்தால், ஒப்பந்தம் கேட்கும் இருவருக்கு ஒன்றுமே கிடைக்காதென்பது தெரியும். அதனால் அந்த இருவருக்கும் தலா ஒரு பொற்காசு கொடுத்தால், அவர்கள் ஒப்பந்தம் கூறுபவனின் ஒப்பந்தத்தை ஏற்று கொள்வார்கள். அப்பொழுது மூன்றாமவனுக்கு ஒன்றும் கொடுக்க தேவையில்லை. ஒப்பந்தம் கூறுபவன் மீதியுள்ள 998 பொற்காசுகளையும் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் இப்பொழுது மணியும் இருக்கிறான். இப்பொழுதும் குறைந்த பட்சம் மூவர் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். நான்கு பேர் இருந்தால் மூன்றாமவனுக்கு ஒன்றுமே கிடைக்காது. அதனால் அவனுக்கு ஒரு காசு கொடுத்தால் அவன் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வான். நான்கு பேர் இருந்தால் ஒரு பொற்காசு பெறும் இருவரில் யாராவது ஒருவருக்கு இரண்டு பொற்காசுகள் கொடுக்க வேன்டும், அதாவது, நாங்குபேர் இருந்தால் அவனுக்கு கிடைப்பதை விட அதிகம் கிடைப்பதாக ஆசை காட்டவேண்டும்; இன்னொருவனுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். நான்காமவனுக்கும் எதுவும் கொடுக்க தேவையில்லை. மீதியுள்ள 997 பொற்காசுகளையும் மணி எடுத்து கொள்ளலாம்.

ஸ்ஸ்ஸ்....! அப்பாடா! ஒரு வழியாக விடையை பதித்து விட்டேன். அட! மழை கூட வந்து விட்டதே!!!;)

4 comments:

Show/Hide Comments

Post a Comment