Thursday, September 28, 2006

உண்மையில் வெற்றியா?

முதலில் தேன்கூடு நிர்வாகிகளிடமும், வாசகர்களிடமும், முக்கியமாக தேன்கூடு செப்டம்பர் மாத போட்டியில் எனக்கு அடுத்ததாக வந்த அனைவரிடமும், என்னை பெரிய மனது பண்ணி மன்னிக்குமாறு வேண்டி கொள்கிறேன். எதற்கு இந்த மன்னிப்பு என்று கேட்கிறீர்களா? தேன்கூடு போட்டியில் எனது கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் இது நேர்மையான முறையில் பெறப்பட்ட வெற்றியல்ல!!! கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நானும் எனது நண்பர்களும் கள்ள வோட்டு போட்டிருக்கிறோம். இதை ஒத்து கொள்வதில் எனக்கு எந்தவிதமான பயமுமில்லை. ஏன் இப்படி செய்தேன்? எழுத்து திறமையுள்ளவர்களை சிறந்த முறையில் ஊக்கப்படுத்துவதற்காக தேன்கூடு குழுவினர் இந்த மாதாந்திர போட்டியை நடத்துகின்றனர். பாராட்ட வேண்டிய விஷயம்தான். ஆனால் சிறந்த படைப்பை தேர்ந்தெடுக்கும் முறையில் உள்ள குறைகளை அவர்களுக்கு சுட்டிகாட்டவே இப்படி செய்தேன். போட்டிக்கு படைப்பை அனுப்பி விட்டு, தேர்ந்தெடுக்கும் முறையிலுள்ள இந்த குறையினால், வெற்றி பெற முடியாதவர்களின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்.

எனக்கு கிடைத்த வோட்டுகளின் மொத்தக் கணக்கு(இந்த கணக்கு எப்படியென்று தெரியவில்லை?) 31. இதில் கள்ளவோட்டுக்கள் மொத்தம் 15. மீதியுள்ளது 16 வோட்டுக்கள், அதாவது 9.09%. நியாயமாக பார்த்தால் எனது கதை முதல் பத்துக்குள்ளேயே வந்திருக்க கூடாது. முதல் பத்திற்குள் வந்தால்தானே நடுவர் குழுவுக்கு அனுப்புவதற்கு!!!

கள்ள வோட்டு எப்படி போடப்பட்டது? வோட்டு போட ஒரு மின்னஞ்ஜல் முகவரியிருந்தாலே போதுமானது! என்னிடமே மூன்று முகவரிகள் இருக்கின்றன! எனது நண்பர்களிடம் கடன் வாங்கியது மீதி 13. இதில் அந்த பதிமூன்று வோட்டுகளையும் போட்டவர்கள் எனது இந்த கதையை இன்னும் படிக்கவேயில்லை. நான் கேட்டு கொண்டதற்காக வோட்டு மட்டும் போட்டார்கள்.

என்னை கேட்டால், சிறந்த படைப்புகளை, இந்த மாதிரி வோட்டு போட்டு தேர்ந்தெடுப்பது என்பதே சரியான முறையில்லை. ஏனென்றால், ஒவ்வொரு வாசகர்க்கும் ஒவ்வொருவிதமான டேஸ்ட் இருக்கும். ஒருவருக்கு மிகவும் பிடிப்பது மற்றவருக்கு பிடிக்காது. மேலும் கதை, கவிதை, கட்டுரை என்ற பேதங்கள் இல்லாமல், எல்லாமே ஒரே கூரையின் கீழ் போட்டியில் கலந்து கொள்கின்றன. இது மிக மிக தவறான அணுகுமுறையாக எனக்கு படுகிறது.

இவ்வளவையும் சொல்லிவிட்டு, இந்த மூன்றாம் பரிசை வாங்கி கொள்வதா? மீண்டும் மன்னிக்கவும். மறுதலிக்கிறேன்.

Monday, September 25, 2006

என்ன சத்தம் இந்த நேரம்?!?!

ஒரு அழகான சாஃப்ட்வேர் எஞ்ஜினியரும்(என்னை மாதிரின்னு வச்சுக்கங்களேன்;)), அவனது ப்ராஜக்ட் மேனேஜரும் ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது எஞ்ஜினியருக்கும், அந்த யுவதிக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.

ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த பையனுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."

ப்ராஜக்ட் மேனேஜர் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோனலையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"

அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"

நம்ம எஞ்ஜினியர் என்ன நினைச்சான் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, தன்னொட ப்ராஜக்ட் மேனேஜரை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"

கொள்ளை - விடை

இந்த புதிரில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், கொள்ளைக்காரர்கள் எல்லோருமே அறிவாளிகள், ஆதலால் தங்களுக்கு கிடைக்க கூடிய அதிகபட்சமான பங்கிலிருந்து கொஞ்சம் குறைந்தாலும் ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளமாட்டார்கள்.

இப்பொழுது சதீஷ் மட்டுமே இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது எல்லா பொற்காசுகளுமே அவனுக்குத்தான்.

சரி. இப்பொழுது சதீஷும், ராஜேஷும் மட்டுமே இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுங்கள். ஒப்பந்தம் சொல்பவனுக்கு எதுவுமே கிடைக்காது. ஏனென்றால் ஒப்பந்தம் சொல்பவன் எவ்வளவு கொடுப்பதாக சொன்னாலும், கேட்பவன் அதை மறுத்து விட்டு அவனை கொன்று விடுவான். அதனால் இருவர் மட்டுமே இருக்கும்பொழுது ஒப்பந்தம் கேட்பவனுக்குத்தான் எல்லா காசுகளும் கிடைக்கும்.

இப்பொழுது இவர்களுடன் கலையும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அப்பொழுது என்ன ஆகும்? ஒப்பந்தம் கூறுபவன் சொல்வது மறுக்கப்பட்டால், அவன் இறந்து விடுவான்; அப்புறம் இருவர் மட்டுமே இருப்பர்; அப்பொழுது ஒப்பந்தம் கூறப்போகிறவனுக்கு எதுவுமே கிடைக்க போவதில்லை. அப்படியிருக்கையில் அவன் மூன்றாமவன் கூறும் ஒப்பந்தத்துக்கு கண்டிப்பாக ஒத்து கொள்வான். அதனால் ஒப்பந்தம் கூறுபவன் 1000 பொற்காசுகளையும் எடுத்து கொண்டு, மற்ற இருவருக்கும் ஒன்றும் கொடுக்க மாட்டான்.

இப்பொழுது சுரேஷும் இருக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். மொத்தம் நான்குபேர். குறைந்தபட்சம் மூன்று பேர் ஒப்பந்தத்தை ஒப்புகொண்டால்தான் ஒப்பந்தம் ஒப்புக்கொள்ளப்படும். ஒப்பந்தம் கூறுபவன் மேலும் இருவரை தனது ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ளுமாறு செய்யவேண்டும். ஏற்கெனவே மூவர் மட்டுமே இருந்தால், ஒப்பந்தம் கேட்கும் இருவருக்கு ஒன்றுமே கிடைக்காதென்பது தெரியும். அதனால் அந்த இருவருக்கும் தலா ஒரு பொற்காசு கொடுத்தால், அவர்கள் ஒப்பந்தம் கூறுபவனின் ஒப்பந்தத்தை ஏற்று கொள்வார்கள். அப்பொழுது மூன்றாமவனுக்கு ஒன்றும் கொடுக்க தேவையில்லை. ஒப்பந்தம் கூறுபவன் மீதியுள்ள 998 பொற்காசுகளையும் எடுத்து கொள்ளலாம்.

ஆனால் இப்பொழுது மணியும் இருக்கிறான். இப்பொழுதும் குறைந்த பட்சம் மூவர் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். நான்கு பேர் இருந்தால் மூன்றாமவனுக்கு ஒன்றுமே கிடைக்காது. அதனால் அவனுக்கு ஒரு காசு கொடுத்தால் அவன் ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வான். நான்கு பேர் இருந்தால் ஒரு பொற்காசு பெறும் இருவரில் யாராவது ஒருவருக்கு இரண்டு பொற்காசுகள் கொடுக்க வேன்டும், அதாவது, நாங்குபேர் இருந்தால் அவனுக்கு கிடைப்பதை விட அதிகம் கிடைப்பதாக ஆசை காட்டவேண்டும்; இன்னொருவனுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். நான்காமவனுக்கும் எதுவும் கொடுக்க தேவையில்லை. மீதியுள்ள 997 பொற்காசுகளையும் மணி எடுத்து கொள்ளலாம்.

ஸ்ஸ்ஸ்....! அப்பாடா! ஒரு வழியாக விடையை பதித்து விட்டேன். அட! மழை கூட வந்து விட்டதே!!!;)